Friday, October 31, 2014

திருவாரூர் தியாகராஜர் கோயில்!!!

கோயில் அமைப்பு
33 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள, மிகவும் பிரம்மாண்டமான இக்கோயிலில், 9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்), 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் அமைந்துள்ளன. இந்தக் கோயிலை சுற்றிப் பார்க்கவே, முழுமையாக ஒருநாள் ஆகும்.
கோயில் வரலாறு
இக்கோயில் இடைக்காலச் சோழர்கள் காலத்தில் கற்கோயிலாக கட்டப்பெற்றதாகும். அதற்கு முன்பு மகேந்திரப் பல்லவன் காலத்தில் செங்கல் கோயிலாக இருந்திருக்க வேண்டும். சோழப் பேரரசர் கண்டராதித்த சோழரது மனைவியாராகிய செம்பியன் மாதேவியாரால் கட்டப்பெற்ற கற்றளியை உடையது. சோழர்கள் மட்டுமல்லாமல், பல்லவர்கள், பாண்டியர்கள், விஜயநகர், தஞ்சை நாயக்கர் மற்றும் மராத்திய மன்னர்களும் தத்தம் ஆட்சியில் இக்கோயிலுக்கு ஆதரவளித்துள்ளார்கள்.
தலச்சிறப்பு
இக்கோயிலில் சிவபெருமானுக்கு இரண்டு சன்னிதிகள் உள்ளது. ஒன்றில் வான்மீகிநாதர் என்றும் மற்றொன்றில் தியாகராஜர் என்றும் சிவபெருமானுக்கு திருநாமங்கள். இவற்றில் வான்மீகி நாதர் சந்நிதி மிகவும் பழமையானது. இதில் அமைந்திருக்கும் லிங்கம் புற்றிலிருந்து சுயம்புவாக தோன்றியதாக வழங்கப்படுகிறது. அப்பர் சுவாமிகள் இதனால் சிவபெருமானைப் புற்றிடங்கொண்டார் என்ற பெயரால் அழைக்கிறார். இத்தலத்தின் தொன்மையை வியக்கும் அப்பர் சுவாமிகள், சிவபெருமானின் திருவிளையாடல்கள் ஒவ்வொன்றையுமாய் சொல்லி, அந்த திருவிளையாடல் நடப்பதற்கு முன்பாகவா, அல்லது பின்பாகவா, திருவாரூரில் எழுந்தருளிய நாள் என வினவுகிறார்.
இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் தியாகராஜர் முதலில் திருமாலால் திருப்பாற்கடலில் வழிபடப்பெற்றவர். பிறகு அவரால் இந்திரனுக்கும், பிறகு இந்திரனால் முசுகுந்த சக்கரவர்த்திக்கும் அளிக்கப்பெற்று, அந்த முசுகுந்த சக்கரவர்த்தியால் இவ்வூரில் பிரதிட்டை செய்யப்பெற்றவர்.
தியாகராஜரின் பாதங்கள் ஆண்டுக்கு இரண்டு தினங்களில் தவிர, மற்ற நாட்களில் மலர்களால் மூடப்பட்டு இருக்கும். பங்குனி உத்திரம் திருவிழா நடைபெறும் சமயம் இடது பாதத்தையும், திருவாதிரை திருவிழா சமயம் வலது பாதத்தையும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.
சமயக்குரவர்களாலும் இதர நாயன்மார்களாலும் பாடற்பெற்ற தலம். அரநெறி நமிநந்தியடிகள் நாயனார் தண்ணீரால் திருவிளக்கேற்றி வைத்து வழிபட்ட திருக்கோயிலாகும். சுந்தரமூர்த்தி நாயனார் பொருட்டுப் பரவை நாச்சியாரிடம் சிவபெருமான் இருமுறை நள்ளிரவில் தூது நடந்து சென்ற திருவீதியை உடையது. இச்செய்தியை "அடியேற்கு எளிவந்த தூதனை" என்னும் அவரது தேவாரப் பகுதி உறுதிப்படுத்தும். காஞ்சிபுரத்தில் ஒருகண் பெற்ற அவர் ``மீளா அடிமை`` என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி மற்றொரு கண்பார்வையும் பெற்றது, இத்தலத்தில்தான்.
திருவாரூர் தேர்
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் நடைபெறும் தேர்த்திருவிழா மிகவும் பெயர் பெற்றது. "திருவாரூர் தேரழகு" என்று சிறப்பிட்டுச்சொல்லும் அளவிற்கு புகழ் பெற்றது. இத்திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களும் பொதுமக்களும் தேரினைக் கோயிலைச் சுற்றி உள்ள வீதிகளில் இழுத்து வருவார்கள்
http://manakkalayyampet.blogspot.in/

நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம். !!!!

மந்திரம் என்ற சொல்லிற்கு உரிய இலக்கணங்கள் எல்லாம் அமைந்ததும், எல்லா மந்திரங்களுக்கும் முதன்மையானதும், தமிழன் கொண்ட இறைக் கொள்கை அனைத்தையும் உள்ளடக்கியதும் ஆகிய மந்திரம் ஐந்தெழுத்து ஆகும்.
நமசிவய எனும் ஐந்தெழுத்தில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொருளைக் குறிக்கும். அதன் விவரம் வருமாறு:
ந – நடப்பு
ம – மறைப்பு
சி – சிறப்பு
வ –வனப்பு
ய – யாப்பு
இதில்,
நடப்பு – உயிர் உலகில் பிறந்து உலகியல் நடப்பு வாழ்வதைக் குறிக்கும்.
மறைப்பு – அறியும் பொருளான உயிரை அறியாமையாகிய இருள் மறைப்பது குறிக்கப் படுகிறது.
சிறப்பு – எல்லோரும் ஒப்புக் கொள்கிற சிறப்பிற்கெல்லாம் சிறப்பான பரம்பொருளைக் குறிக்கும்.
வனப்பு – பேராற்றல் படைத்த பரம்பொருள் மிகச்சிறிய ஆற்றல் படைத்த உயிருடன் தொடர்பு கொள்ளுவது குறிக்கப்படுகிறது.
யாப்பு – அனுபவம் கொடுத்து உயிருக்கு அறிவை ஏற்றுவதற்காக அல்லது அறியாமையைத் தேய்ப்பதற்காக உயிர் ஓர் உடலில் கட்டப்படுவது குறிக்கப் படுகிறது. யாக்கப்படுவதால் யாப்பு.
பஞ்சாட்சரம் (ஐந்து அட்சரம்) எனும் வடமொழிச் சொல் நமது ஐந்தெழுத்து எனும் தமிழ்ச் சொல்லிற்கு ஒரு மொழி பெயர்ப்பே. அவ்வளவுதான். எப்படி ஆங்கிலத்தில் FIVE LETTERS என்று கூறுகிறோமோ அதைப் போல. அதற்கு எந்த இறைக் கொள்கையும் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் அவர்கள் சொல்லும் அடிப்படையே வேறு.
1. வடமொழியாளர்கள் சொல்வது நமஹ்சிவாய. இதில் ந-1, ம-2, ஹ்-3, சி-4, வா-5, ய-6 என்று ஆறு எழுத்துக்கள் உள்ளன. இதை எப்படி அவர்களால் பஞ்சாட்சரம் – அதாவது ஐந்து எழுத்து என்று சொல்ல முடியும்?
2. நமஹ்சிவாய எனும் வடமொழிச் சொல் சிவனுக்கு வணக்கம் என்று பொருளில்தான் சொல்லப்படுகிறது. நமது தமிழ் ஐந்தெழுத்து இதை சிவனுக்கு வணக்கம் என்ற பொருளில் சொல்லுவதில்லை. மேலும் ‘சிவனுக்கு வணக்கம்’ என்பது ஒரு வாக்கியமே தவிர ஐந்தெழுத்தாக (அதாவது பஞ்சாட்சரம் ஆக) முடியாது.
இந்த ஐந்தெழுத்து முதல் மந்திரம் பொதுவானது. எல்லாச் சமயங்களுக்கும் பொருந்துவது. இதைத் தமிழில் ஆக்கியிருப்பதால் தமிழ் மந்திரம் என்றும், இதனை உலகுக்கெல்லாம் பொதுவாக உருவாக்கிய பண்டைய தமிழர்களின் பெருமையையும் ஒருங்கே காணமுடிகிறது.
Via FB இந்து மத வரலாறு - Religious history of hinduism

மூலிகை சாபநிவர்த்தி மந்திரம்

பொதுவான மந்திரம்
ஆனைமுகனை அனுதினமும் மறவேன் அகத்தியர் சாபம் நசிநசி
பதினெண்சித்தர் சாபம் நசிநசி தேவர்கள் சாபம் நசிநசி
மூவர்கள் சாபம் நசிநசி மூலிகை சாபம் முழுதும் நசிநசி.
குறிப்பு : மேற்கூறிய மூலிகை சாபநிவர்த்தி மந்திரத்தை ஞாயிற்றுக்கிழமை பிரம்ம முகூர்த்த வேலையில் ஆதிமூலக்கொடிக்கு (கொடிஅருகு) கன்னி நுால்காப்பு கட்டி மறு ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து ஒரு இலட்சம் உரு ஏற்றவும். பிறகு நமக்கு தேவையான பட்சத்தில் மூன்று முறை கூறி சாபநிவர்த்தி செய்து நமக்கும் பிறர்க்கும் பயன்படுத்தலாம்.
மூலிகை பிராண பிரதிஷ்டை
ஓம்மூலி மஹாமூலி ஜீவமூலி
உன் உயிர் உன் உடலில் நிற்க சிவா.
குறிப்பு : இந்த மந்திரத்தை மூன்றுதரம் சொல்லி கொஞ்சம் விபூதியும் அருகம்புல்லும் மேலே போட்டு வணங்கி ஆணிவேர் அருபடாமல் விரல்நெகங்கள் படாமல் எடுத்து பயன்படுத்திக் கொள்ள மூலிகை உயிருடனிருந்து பலன் கொடுக்கும்.
சர்வ வசிய மூலிகை
ஆதிவாரத்தில் ஆலம் புல்லுருவிக்கு சாப நிவர்த்தி செய்து பிராண பிரதிஷ்டை செய்து துாப தீபம் காட்டி மஞ்சள் நுால் காப்பு கட்டி மறு ஆதிவாரம் சூரிய உதயத்தில் பொங்கலிட்டு பால் பழம் நைவேத்தியம் வைத்து துாப தீபங் காட்டி ”அம் அம் வசீகரம் ஜெயமாதா” என்று இலட்சம் உரு கொடுத்து எடுத்துக்கொள்ளவும். இதனால் சர்வ வசியமும் சித்தியாகும்.
http://maanthireegam.blogspot.in/

Thursday, October 30, 2014

உள்ளத்தே உள்ளதே உண்மை

பகவான் ரமணர் அடிக்கடி கூறுவதுபோல், இவ்வுலகில் எதற்காவது நிரூபணம் தேவை இல்லை என்றால் அது “நான் இருக்கின்றேனா?” என்ற ஒரே ஒரு கேள்விக்குத்தான். அதை யாரும் கேட்பதில்லை என்பது வேறு விஷயம். எவருக்கும் எந்த விஷயத்திலும் சந்தேகம் என்றால் உடனே அதற்கு நிரூபணம் கேட்பார்கள். தான் இருப்பதை யாரும் சந்தேகப்படாததால் அந்தக் கேள்வியும் எழுவதில்லை. கேள்வி எழாதது மட்டும் அல்ல, அப்படி யாராவது கேட்டாலும் அவர்களை ‘இது என்ன பைத்தியக்காரன் போல கேட்கிறானே?” என்று கூட சந்தேகமாகப் பார்ப்பார்கள். அதாவது தான் இருப்பதில் யாருக்கும் எள்ளளவு கூட சந்தேகம் கிடையாது. ஆனாலும் “நான் யார்?” என்ற கேள்வி நல்ல மன நிலையில் இருப்பவர்கள் எவர் கேட்டாலும், அது அவர் தம் வாழ்வின் அர்த்தங்களையும், நோக்கங்களையும் புரிந்து கொள்ள உதவும். அப்படி ஒருவன் கேள்வி கேட்பது அவனது மனமும் புத்தியும் இயங்கும் சாதாரண மன நிலையில் தான். அதற்கு பதிலும் அந்த நிலையிலேயே வருவதைவிட, அதனினும் சூட்சமமான அனுபவ நிலையில் வருவது விசேஷமானது தான். அது ஏன் என்பதைத்தான் இக்கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.
“நான் யார்?” என்ற கேள்வியைக் கேட்கும் முன், நாம் என்ன நிலையில் இருந்துகொண்டு கேட்கிறோம் என்று பார்க்க வேண்டும். நம் தினசரி அனுபவங்களை மட்டும் கருத்தில் கொண்டு வேறு எந்த விதமான யூகங்களும் இல்லாது நம் நிலையை அலசிப் பார்ப்போம். நாம் உலகில் உள்ள எதையுமே நமது ஐம்புலன்களின் உதவியால்தான் அறிகிறோம். அதன்பின் நமது ஆறாவது அறிவையும் கொண்டு அவைகளை அலசிப் பார்த்து சில பல எண்ணங்களையும் உணர்வுகளையும் வளர்த்துக் கொள்கிறோம்; அவைகளை மனதளவிலும் நிறுத்திக் கொள்கிறோம். இப்படியாகச் செய்து உலகில் உள்ள அனைத்து விஷயங்களிலும் ஈடுபடுகிறோம். இந்தக் கட்டுரையைப் படிக்கும் போதும், அவை அனைத்தும் நடந்து கொண்டிருக்கிறதல்லவா? அப்படி இல்லையென்றால் மனது ஒரு பக்கமும் பார்வை ஒரு பக்கமும் இருக்கிறது என்று தானே அர்த்தம்? அப்படி மனது குவிந்திருந்தாலும் சிதறியிருந்தாலும் அது நம் விழிப்பு நிலையில் தான் நடந்து கொண்டிருக்கிறது.
இது நமக்கு உணர்த்துவது என்ன? நாம் விழித்திருக்கும்போதும் நினைவிருக்கும்போதும், உலகத்தைக் காண்கிறோம்; உலகத்தில் உள்ளவைகளுடன் விதவிதமான அனுபவங்கள் அடைகிறோம். அப்படியாக நமது வாழ்க்கை அனுபவங்கள் ஒரு தொடர் நிகழ்ச்சியாக வந்து கொண்டிருக்கின்றன. இதில் கூர்ந்து கவனிக்க வேண்டியது என்னவென்றால், என் உலகத்தில் நீங்கள் உண்டு, மற்றவைகள் உண்டு, ஆனால் நான் இல்லை. நான் பார்ப்பவனாக, அனுபவிப்பவனாக மட்டும் தான் இருக்கிறேன். அதே போல் உங்கள் உலகத்தில் நான் உண்டு, மற்றவைகள் உண்டு, ஆனால் நீங்கள் இல்லை. அதாவது ஒவ்வொருவரும் தம் தம் உலகத்தை சிருஷ்டித்துக் கொள்கின்றனர். காணும் தன்னை விட்டு உலகம் என்று தனியாக எதுவும் கிடையாது. தனது எண்ணங்களுக்கும், ஆசை அபிலாஷைகளுக்கும் ஏற்ப ஒவ்வொருவரும் உலகத்தில் நடந்து கொள்கின்றனர். பொதுவாக மற்றவர்களும் அப்படியே நடக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர். முடியாத போது மற்றவர்களிடம் அனுசரித்துப் போகின்றனர். ஆக இவை அனைத்தும் சம்பந்தப்பட்டவர்கள் விழித்துக் கொண்டிருக்கும் போது நடக்கின்றது என்பதைத் தவிர இதில் வேறு ஏதும் ஒற்றுமை கிடையாது. நம் விழிப்பு நிலை (ஜாக்ரத்) தவிர வேறு நிலைகளும் நம் அனுபவத்தில் உண்டு. அவை என்ன?
விழிப்பு நிலையிலேயே நம்மால் எப்போதும் இருக்க முடிகிறது என்றால், நம் அனுபவங்கள் அனைத்தையும் உண்மை என்று கொள்ளலாம். அப்படி இல்லையே! நம்மால் ஒரு நாளோ இரண்டு நாளோ விழித்திருக்க முடியும் என்று வைத்துக்கொள்வோம். அப்புறம் கண்ணயர்ந்து தூங்கப் போய்விடுவோம் அல்லவா? அப்போது நமக்கு எங்கே உலகம் தெரிகிறது? ஏன் நம்மைப் பற்றியே அப்போது நமக்கு உணர்வு இல்லையே. தூக்க நிலையிலிருந்து விழித்தபின் தன்னை உணர்கிறோம், அப்புறம்தானே உலகத்தையும் உணர்கிறோம்? அதாவது தானும் உலகும் ஒன்றாகத் தான் உதிக்கிறது; விழித்திருக்கும்போது தான் உலகம் தெரிகிறது, ஆனாலும் அந்த நிலையில் நம்மால் தொடர்ந்து இருக்க முடியாது. உலகமே தெரியாத ஆழ்தூக்க நிலைக்கு (ஸுஷுப்தி) நாம் தினம் தினம் சென்றால் தான் உலகம் பற்றிய அனுபவங்களைப் பெறமுடிகிறது. அப்படி இருந்தும் நமது விழிப்பு நிலை அனுபவங்களுக்கே நாம் மிகுந்த முக்கியம் கொடுக்கிறோம். இதிலிருந்து புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான அம்சம் என்னவென்றால், நாம் ஒவ்வொருவரும் நமது தனித்தனி உலகத்தை சிருஷ்டித்துக் கொள்கிறோம் ; அது மட்டுமன்றி அவ்வுலகம் எப்போதும் உள்ளதாகவும் நினைத்துக் கொள்கிறோம். உண்மை என்றால் அது எப்போதும் உள்ளதாக இருக்க வேண்டும் அல்லவா? ‘இப்போது உள்ளது, அப்புறம் இல்லாதது’ என்ற தன்மை கொண்ட உலகத்தையும் அதன் அனுபவங்களையும் உண்மை என்று எப்படிக் கொள்ள முடியும்?
சிலர் ‘இல்லையே நீ தூங்கும்போதும் உலகம் இருக்கிறதே’ என்று சொல்வார்கள். உண்மையில் அது தூங்கும் எனக்கு இல்லை, வேறு யார் விழித்துக்கொண்டு இருக்கிறார்களோ அவர்களுக்குத் தான் இருக்கிறது. ஆனாலும் தூக்கத்தில் நாம் இல்லாது போய்விட்டோமா என்று கேட்டால், இல்லை என்றுதான் சொல்லுவோம். ஏனென்றால் நமக்கு தூக்கத்திலும் ஒரு அனுபவம் இருப்பதால் தான், விழித்ததும் ‘நன்கு தூங்கினோம்’ என்று சொல்கிறோம். அப்போது நம்மை நாம் உணர்வதில்லை, உலகம் இருப்பதையும் அறிவதில்லை, ஆனாலும் ஆழ்ந்த தூக்கத்தில் அனுபவம் உண்டு என்றால் நாம் இருக்கிறோம் என்றுதானே அர்த்தம்? அது மட்டுமல்ல; அப்படி நன்கு தூங்கிய பின் நமக்கு ஒரு ஆனந்த மயமான உணர்ச்சி வருகிறதல்லவா? அந்த உணர்ச்சியை நாம் விழித்திருக்கும் போதும் அனுபவிக்க முடியும் என்றால் நன்றாக இருக்கும் அல்லவா? இதை நாம் இவ்விரண்டு நிலைகளுக்கும் இடைப்பட்ட கனவு நிலை (ஸ்வப்னம்) மூலம் மேலும் அறிந்து கொள்ளலாம்.
விழிப்பு, ஆழ்நிலைத் தூக்கம் தவிர மூன்றாவதாக நமக்கு கனவு நிலையும் ஒரு அனுபவமே. ஆனால் அப்போது நடப்பதை நாம் மட்டுமே அறிவோம். இது மற்ற இரு நிலைகளின் கதம்பம் என்று கூடச் சொல்லலாம். விழிப்பு நிலை போன்ற அனுபவங்களும் இங்கு உண்டு; தூக்க நிலை போன்று அதன் இறுதியில் ஒன்றும் நிலையாத தன்மையும் இங்கு உண்டு. கனவு நிலை அனுபவங்களின் உண்மைத் தன்மைதான் என்ன? கனவு முடிந்ததும் ஏதும் இல்லை என்றாலும், கனவு காணும் போது அது முடியும் வரை அவை அனைத்துமே உண்மை என்றுதான் உணர்வோம். அங்கும் உணர்வதற்கு ஒருவன் இருக்கிறான்; ஆனாலும் கனவு முடிந்தபின் விழிப்பு நிலையில் தான் அதன் விவரங்களைக் கூற முடியும். அனுபவம் ஒரு நிலையிலும், அதைப் பற்றிய விளக்கம் வேறு நிலையிலும் என்பது தான் கனவிற்கும் தூக்கத்திற்கும் உள்ள ஒற்றுமை. விழிப்பு நிலையில் நாம் இருப்பது போலவே கனவு நிலையில் நம்மைப் போன்று ஒருவரையும், உலகம் ஒன்றையும் உருவகப்படுத்தி நாம் கனவை அனுபவிக்கிறோம். கனவு காணும் போது அது நாம் உருவகப்படுத்தியது தான் என்பதை நாம் விழிக்கும் வரை உணரமுடியாது. ஆனாலும் அனுபவங்கள் உண்டு. இல்லையென்றால் விழித்தபின் அவைகளைச் சொல்லமுடியாதே. ஆக இவைகள் அனைத்திலிருந்தும் நமக்குத் தெரிவது என்ன?
1. கனவு நிலையிலும், தூக்க நிலையிலும் அனுபவிப்பவன்(ள்) என்று ஒருவன்(ள்) இருக்கிறான்(ள்) அல்லது ஒன்று இருக்கிறது.
2. தூக்க நிலையில் ஒரு அமைதியும் ஆனந்தமும் கிடைக்கிறது.
3. விழிப்பு நிலையில் உள்ளது போலவே வரும் கனவு நிலை அனுபவங்கள் நிரந்தரமற்றவை; உண்மையல்ல.
4. நிரந்தரமாயிருக்கும் ஆனந்தத்தைத் தேடும் ஒருவன் விழிப்பு நிலை அனுபவங்கள் எதனின்றும் தூக்கத்தில் கூட கிடைக்கும் அந்த ஆனந்த நிலையை இன்னமும் அடையவில்லை.
நாம் தினம் தினம் அனுபவிக்கும் இந்த மூன்று நிலைகளுக்கும் மேலே நாலாவது நிலை (துரீயம்) ஒன்று உள்ளது என்றும், அதுதான் இம்மூன்று நிலைகளுக்கும் ஆதாரமாக உள்ளது என்றும் முற்றும் உணர்ந்த ஞானிகள் கூறுகின்றனர். அதை உணர்ந்தால் நாம் பிறந்த பயனை அடைந்து, வாழ்க்கையின் இரகசியத்தையும் அறிவோம் என்றும் கூறுகின்றனர். அப்போது கனவு அனுபவங்கள் எப்படி உண்மையில்லை என்று விழித்தபின் உணர்கிறோமோ, அதே போன்று நனவு அனுபவங்களும் உண்மையானது அல்ல என்று அந்த முதிர்ந்த நிலையில் உணர்வோம்.
இந்த அளவு வரையில் நாம் நமது அனுபவங்களை புத்தி பூர்வமாக அலசி ஆராய முடியும். இதற்கும் மேலே சென்று நாம் தூக்கத்தில் அடையும் “என்றும் உள்ள அந்த ஆனந்த” நிலையை நமது பயிற்சி (Abhyasa) சாதனைகள் (Sadhanas) மூலமும், சாதுக்கள் சகவாசம் மூலமும் அடைய முயற்சி செய்யவேண்டும். அப்போது என்றும் ஆனந்தமாய் உள்ள பரமார்த்திக பெருநிலையை அடைவோம். இப்போது நாம் அமைதியாக இருக்கும்போதும், ஆழ்ந்த தூக்கத்திலும் அடையும் அந்த இன்பமே அது என்றும், அது நிரந்தரமாக நம்மில் உள்ளது என்றும் உணர்வோம். அதை நம்மிடம் இருந்து மறைத்து வைக்கும் நமது பழைய எண்ணங்களும், செயல்பாடுகளும் விலகுவதற்கே நாம் எண்ணிலாப் பிறவி எடுக்கிறோம். அதை உணர்ந்து நாம் உலகத்தில் செயல்பட, அவைகள் ஒன்றன்பின் ஒன்றாக விலக, என்றும் உள்ளது தவிர வேறு உண்மை எதுவும் இல்லை என்பது நமது அனுபவத்தில் இப்பிறவியிலேயே வரும். அதற்கு என்றும் எங்கும் உள்ள அந்த உண்மைப் பொருளே அருள் கொடுக்கும்.
அதை இப்போதே ஏன் கொடுக்கவில்லை என்கிறீர்களா? அப்படிக் “கேட்பது யார்?” என்ற கேள்வியுடன் உங்கள் பயிற்சியைத் தொடங்குங்கள்
http://vijayastreasure.blogspot.in/

மஹா பெரியவா வார்த்தைகள!!!!

1. உடம்பினால் நல்ல காரியம் செய்யவேண்டும். கோயிலுக்குப் போய் பிரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்ய வேண்டும். தண்டம்சமர்ப்பித்தல் என்று சமஸ்காரத்தைச் சொல்லுவார்கள். தடியைப்போல் விழுவது தான் அது. இந்த உடம்பு நமதன்று, அவருடையது என்று நினைத்து அவர் சந்நிதியில் போட்டு விட வேண்டும்.
2. இந்த ஜென்மத்திற்குப் பின்பும் உபயோகப்படக் கூடிய சில காரியங்கள் செய்யப்பட வேண்டியது அவசியம். விபூதி இட்டுக் கொள்ளுதல், ருத்ராக்ஷம் அணிதல், ச்ராத்தம் செய்தல் முதலிய காரியங்கள் நாம் எப்பொழுதும் சௌக்யமாக இருப்பதற்கு உதவுங்காரியங்கள்.
3. நாமாவும் ரூபமும் இல்லாத மதம் நமது மதம். பேர் ஏன் இல்லை? அடையாளம் ஏன் இல்லை? மற்ற மதங்களுக்கெல்லாம் இருக்கிறதேஎன்று ஒரு சமயம் யோசித்துப் பார்த்தேன். அப்புறம் எனக்கு நிரம்ப சந்தோஷமாக இருந்தது. பேரில்லாமல் இருப்பது ஒரு கௌரவம் என்பது ஏற்பட்டது.
4. நம்முடைய மதம் எவ்வளவோ யுகங்களாக நீடித்து வாழ்ந்து வருகிறது. நமக்குத் தெரியாமல் ஏதோ ஒன்று இதைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. எவ்வளவோ வித்யாசங்கள் இருந்தாலும் இந்த மதம் அழியாமல் நிற்கிறது. லோகம் புரண்டு போனாலும் நம்முடைய கடமைகளைச் செய்து கொண்டு பயமின்றி அன்புடன் சாமாண்ய தர்மங்களை நன்றாக ரக்ஷித்து விசேஷதர்மத்தைக் கூடியவரை ரக்ஷிக்க வேண்டும். அதற்குரிய சக்தியைப் பகவான் அளிப்பாராக.
5. மூன்று மூர்த்திகளுக்கும் மேலே அதீதராகப் பரமசிவன் இருக்கிறார். அவர் ப்ரம்மாவுக்கு அனுக்ரஹம் பண்ணுகிறார். காமேச்வரனாக அருள் புரிகிறார். பராசக்தி காமேச்வரியாக அனுக்ரஹிப்பாள். பரமேச்வரனுடைய அனுக்ரஹத்தால் ப்ரம்மா வேதங்களை அறிந்து கொள்கிறார். நான்கு வேதங்களையும் நான்கு முகத்தில் சொல்லிக் கொண்டு சிருஷ்டியைச் செய்து கொண்டிருக்கிறார்.
6. வேதத்திலிருப்பதை எல்லோருக்கும் நன்றாக விளங்க வைப்பது பதினெட்டு புராணங்கள். பதினெட்டு உப புராணங்கள் வேறேஇருக்கின்றன. பதினெட்டு புராணங்களும் சேர்ந்து நான்கு லட்சம் கிரந்தம். ஒரு கிரந்தம் என்பது 32 எழுத்துக்ள் கொண்டது. பதினெழு புராணங்கள் மூன்று லட்சம் கொண்டவை. மிகுதியுள்ள ஒரு லட்ச கிரந்தம் ஸ்காந்த புராணம். பரமசிவனைப் பற்றிச் சொல்பவை பத்து புராணங்கள், அவைகளுள் ஒன்றே லட்சம் கிரந்தம் உடையது.
7. பாபத்தை ஒரேக்ஷணத்தில் துவம்சம் பண்ணும் ஒரு வஸ்து உண்டு. இரண்டு எழுத்துக்களாலான பெயர் அது. வேதங்களின் ஜீவரத்னம் அதுவே. கோயிலில் மஹாலிங்கம் போலவும் தேகத்தில் உயிர் போலவும் அது வேதங்களின் மத்தியில் இருக்கிறது. (''சிவ'' என்ற இரண்டு எழுத்துக்களே அது) அதை ஒருதரம் சொன்னால் போதும். வேறு ஒரு காரியத்துக்கு நடுவிலும் சொல்லலாம். சொன்னால் அந்த க்ஷணத்திலேயே பாபத்தைப் போக்கிவிடும்.
8. வேதங்களுள் யஜுர் வேதம் முக்கியமானது. அதற்குள் அதன் மத்திய பாகமாகிய நாலாவது காண்டம் முக்கியமானது. அதற்குள்ளும் மத்திய பாகமான நாலாவது ப்ரச்னம் முக்கிய மானது. அதுதான் ஸ்ரீருத்ரம். அதற்குள்ளும் ‘நம: சிவாய’ என்ற பஞ்சாக்ஷர வாக்கியம் மத்தியில் இருக்கிறது. அதன் மத்தியில் ‘சிவ’ என்ற இரண்டு அக்ஷரங்கள் அடங்கியுள்ளன. இதையே ஜீவரத்னம் என்று பெரியோர்கள் சொல்லுவார்கள். இந்த அபிப்பிராயத்தை அப்பய்ய தீக்ஷிதர் ப்ரம்மதர்க்க ஸ்தவத்தில் சொல்லியிருக்கிறார்கள். அந்த ப்ரம்மம் சிவஸ்வரூபம் என்று தெரிகிறது.
9. அப்படிப்பட்ட ஸ்வரூபத்தை ஆராதிப்பதற்கு அடையாளமாகச் சிவபக்தர்கள் எல்லோரும் ஐந்து வித காரியங்களைச் செய்து கொண்டிருக்க வேண்டும். அவைகளாவன: (1) விபூதி தரித்தல், (2) ருத்ராக்ஷம் அணிதல், (3) பஞ்சாக்ஷர மந்திரத்தை ஜபம் செய்தல், பஞ்சாக்ஷர மந்திரம் உபதேசமாகாதவர்கள் ‘சிவ’ என்ற பதத்தை ஜபம் செய்தல், (4) வில்வ தளத்தால் பரமேச்வரனைப் பூசித்தல், (5) இருதயத்தில் சதா சிவத்யானம் செய்தல் இவைகள் ஒவ்வொன்றும் ஈச்வரனுக்கு விசேஷப்ரீதியைக் கொடுக்கக் கூடியது.
(குறிப்பு: பஞ்சாக்ஷர மந்திரத்தை உபதேச பெற்று ஜபம் செய்தல் சிறப்பு. எனினும் உபதேசம் பெறாதவரும் இம்மந்திரத்தைத் தாராளம் சொல்லலாம். ''கொல்வாரேனும், குணம் பல நன்மைகள் இல்லாரேனும் இயம்புவராயிடின் எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால் நல்லார் நாமம் நமச்சிவாயவே'' - சம்பந்தர்.)
10. பரமேச்வரனுடைய கீர்த்தியை நாம் வாக்கினால் சொல்லுவதனாலும் கேட்பதனாலும் பவித்திரர்களாக ஆகிறோம். அவருடைய ஆக்ஞையை யாரும் மீறமுடியாது. அகம்பாவமாக இருக்கும்போது அவர் சிக்ஷிக்கிறார். குழந்தைகள் ஏதாவது தப்பு செய்தால் நாம்அடிக்கிறோம். அதுபோல பரமேச்வரன் தேவதைகளை சிக்ஷித்தார். ஹாலஹால விஷம் பாற்கடலில் உண்டானபொழுது அதைச் சாப்பிட்டு ரக்ஷித்தார். சகல தேவதைகளும் பரமேச்வரனுடைய குழந்தைகள்.
11. பரமேச்வரன் ஓங்காரம், ஸ்வரூப ப்ரம்மமும் ஓங்காரந்தான். அதனுடைய அர்த்தத்தை விசாரிக்கும் ஓர் உபநிஷத்தே தனியாக இருக்கிறது. அதற்கு மாண்டூக்யோபநிஷத் என்று பெயர். அதில் ‘சாந்தம் சிவம் அத்வைதம் சதுர்த்தம் மன்யந்தே’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. சிவஸ்வரூபம் தான் பரப்பிரம்மம். ப்ரதோஷ காலத்தில் ஈச்வர தரிசனம் செய்ய வேண்டும். ஈச்வரன் கோயிலில் ப்ரதோஷ காலத்தில் எல்லாத் தேவர்களும் வந்து ஈச்வர தரிசனம் செய்கிறார்கள்.
12. சாங்க்ய சூத்திரத்தில் மூன்று கண் உள்ளவன் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அமரமும் அப்படியே சொல்லுகிறது. லோகத்தில் ஈச்வரன் என்ற சப்தம் சிவனுக்கே வழங்கப்படுகிறது. அவன் மஹாபுருஷன், ப்ரம்ம சூத்திரத்தில் ‘சப்தாதேவப்ரமித’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஈசானன் என்னும் சப்தத்திற்கு எது அர்த்தமோ அதுதான் பரமேச்வர ஸ்வரூபம்.
13. நம்முடைய ஆசார்ய ஸ்வாமிகள் ப்ரச்நோத்தர ரத்ன மாலிகா என்ற க்ரந்தத்தில் ஒரு கேள்வி கேட்கிறார். ‘கோ ப்ராம்மணை ருபாஸ்ய:?’ ‘காயத்ரி அர்க்காக்னி கோசர: சம்பு:’ எந்த வஸ்து காயத்ரி, அக்னி, அர்க்கன் (சூரியன்) என்னும் மூன்றிலும் ப்ரகாசிக்கிறது? சிவன் தான். காயத்ரியின் பரமதாத்பர்யமாயிருப்பவர் அவரே. சூரியனிடத்தில் பிரகாசிப்பவரும் அவர் தான். ஸ்ரீருத்ரத்தில் பரமேச்வரன் அக்னி ஸ்வரூபியாக இருக்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. எனவே இந்த மூன்றிலும் பரமேச்வரனை ஆராதிக்க வேண்டும்.
14. விவாஹ காலத்தில் அம்பாளை அவசியம் ஆராதிக்க வேண்டும். ருக்மணி ஸ்ரீகிருஷ்ணன் பர்த்தாவாக வரவேண்டுமென்று அம்பிகையை ஆராதித்தாள். அம்பிகையின் ஆராதனத்தால் பதிபக்தியும் குருபக்தியும் உண்டாகிறது. அதற்காகத்தான் ருக்மணி பூஜை செய்தாள்.
15. ஜகத்துக்குத் தாயாகவும் கருணையுடையவளாகவும் இருக்கும் பரதேவதையிடம் பக்தி இருக்க வேண்டும். எப்படி குழந்தைக்கு வேண்டியதைத் தாய் தருவாளோ அப்படி அம்பிகை லோகத்தில் வித்தை, செல்வம் முதலியவைகளை அடையச் செய்து பின்பு தானாகப் பழுத்துப் பரமானந்தத்தைப் பெறும்படி அனுக்ரஹம் செய்வாள்

Wednesday, October 29, 2014

வாழ்கை சுழற்சி – பட்டினத்தார் பாடல் !!!

பிறந்தன இறக்கு மிறந்தன பிறக்கும்
தோன்றின மறையு மறைந்தன தோன்றும்
பெருந்தன சிறுக்குஞ் சிறுத்தன பெருக்கும்
உணர்ந்தன மறக்கு மறந்தன வுணரும்
புணர்ந்தன பிரியும் பிரிந்தன புணரும்
அருந்தின மலமாம் புனைந்தன அழுக்காம்
உவப்பன வெறுப்பாம் வெறுப்பன உவப்பாம்
என்றிவை யனைத்து முணர்ந்தனை யன்றியும் - பட்டினத்தார்
பிறந்த உயிர்கள் அனைத்தும் இறக்கின்றன் இறந்த உயிர்கள் மீண்டும் பிறக்கின்றன. பெரிய பொருள் சிறிய பொருளாகும் சிறிய பொருள் பெரியவையாகும். அறிந்தவை அனைத்தும் மறந்துபோகும் மறந்தவை அனைத்தும் தெரியவரும். சேர்ந்தவை அனைத்தும் பிரியும். பிரிந்தவை அனைத்தும் சேரும். உண்டவை அனைத்தும் மலமாம். புனைந்த அனைத்தும் அழுக்கு ஏறிவிடுமாம். இன்று விரும்புபவை நாளை வெறுக்க தோன்றும் நேற்று வெறுத்தவை இன்று விரும்ப தோன்றும் என்று அனைத்தையும் உணர்ந்து விட்டேன்,

Tuesday, October 28, 2014

காயத்ரீ மந்திரத்தின் ஒவ்வொரு வார்த்தைக்கும் இறையருள் வழங்கும் ஒவ்வொரு சக்தி உண்டு

ஓம் பூர்ப்புவ ஸ்ஸீவ தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ் தீமஹி தியோ யோன: ப்ரசோதயாத்
இதுவே காயத்ரீ மந்திரம். இந்த காயத்ரீ மந்திரத்தில் முதல் வரியான ஓம் பூர்ப்புவஸ்ஸீவ-இதில் ஓம் என்பது பிரணவம் ஆகும். பூர்ப்புவஸ்ஸீவ என்பது பூலோகம், புவர்லோகம், சொர்க்கலோகம் ஆகும். தத் எனும் இரண்டாவது வரியிலிருந்து ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு பொருளும், சக்தியும் உண்டு.
தத்- என்ற சொல் தபினி என்ற அம்பிகையைக் குறிக்கிறது. வெற்றியைத் தருபவள்.
ச- என்ற எழுத்து சாமுண்டியை குறிக்கும். இவள் வீரத்தையும், வலிமையையும் அளிப்பாள்.
வி- என்ற எழுத்து விஸ்வா என்ற சக்தியைக் குறிக்கிறது. இவள் நல்ல பலன்களைத் தருவாள்.
துர்-என்ற சொல் துஷ்டி என்ற சக்தியைக் குறிக்கிறது. இவள் சுக வாழ்வு தருவாள்.
வ-என்ற எழுத்து வரதாம்பிகையைக் குறிக்கும். இவள் யோகத்தினைக் கொடுப்பாள்.
ரே - என்ற எழுத்து ரேவதியைக் குறிக்கிறது. இவள் திருமணம் நடத்தி வைக்கவும், தம்பதியருக்குள் அன்பை உருவாக்கும் தேவியாவாள்.
ணி- எழுத்து சூக்ஷ்மா என்ற அம்பிகை ஆவாள். செல்வம் வழங்குவாள்
யம்- ஞானாம்பிகையைக் குறிக்கும். அழகை அளிப்பாள்.
பர்- கார்கவியைக் குறிக்கும். இவள் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறாள்.
கோ- கோமதி ஆவாள். இவள் நல்ல அறிவையும், ஞானத்தையும் தருவாள்.
தே- தேவிகாவைக் குறிக்கும். இவள் தீய சக்திகளை அழிப்பாள்
வ- வராகியைக் குறிக்கும். தவயோகம் தருவாள்.
ஸ்ய- சின்ஹனியைக் குறிக்கும். இருப்பதை காக்கும் சக்தி படைத்தவள்.
தீ- தியானாம்பிகையைக் குறிக்கும். இவள் நீண்ட ஆயுளைக் கொடுப்பவள்.
ம - மர்யாதா என்ற அம்பிகை ஆவாள். இவள் புலனடக்கம் அளிப்பாள்.
ஹி- ஸ்புட நாயகியைக் குறிக்கிறது. எடுத்த காரியத்தை நிறைவேற்றும் சக்தி கொண்டவள்.
தி- மேதா அம்பிகையைக் குறிக்கிறது. இவள் வருங்காலத்தை உணர்த்துவாள்
யோ- யோகமாயா ஆவாள். விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவாள்.
யோன- யோனியைக் குறிக்கும். உணவு உற்பத்தியையும், விவசாய விருத்தியையும் கவனிப்பாள்.
நஹ்- தாரணியைக் குறிக்கிறது. இவள் சுக வாழ்வு அளிப்பாள்.
ப்ர்- ப்ரபவா என்ற அம்பிகை ஆவாள். குறிக்கோளை அடைய உதவுவாள்.
சோ- ஊஷ்மா தேவியைக் குறிக்கும். இவள் அச்சத்தைப் போக்கி தைரியத்தை அளிப்பாள்.
த்- த்ரஷ்யா என்ற அம்பிகை ஆவாள். இவள் நல்லறிவு, விவேகம் தருவாள்.
யாத்- நிரஞ்சனா தேவியைக் குறிக்கும். இவள் தொண்டு செய்யும் மனதை தருவாள்.
ஆவணித் திங்கள் 14ம் நாள் காயத்ரீ ஜெபத்திற்கு தகுந்த நாள். அன்று இந்த மகத்தான மந்திரத்தை ஜபித்து அனைவரும் பலன் பெறலாம்

ஜீவ சமாதி

நண்பர் ஒருவர் நேற்று என்னை சந்திக்கையில் ஒரு கேள்வியைக் கேட்டார். ஐயா, ஜீவ சமாதி என்று சொல்கிறீர்களே, அது தற்கொலை அல்லவா ? அதற்கு உடந்தையாக, சாட்சியாக இருந்தவர்கள் கொலைகாரர்கள் தானே ? உயிரோடு ஒருவரைப் புதைப்பது கொலைதானே ? என்று கேட்டார். அவரைச் சொல்லி குற்றமில்லை. இன்றைய நடைமுறை சட்ட திட்டங்களின்படி அது தற்கொலை என்றே கொள்ளப்படும். உயிரோடு புதைப்பவர்கள் கொலைகாரர்களே என்று தீர்ப்பு சொல்லி விடுவார்கள். ஆனால் யோகிகள், சித்தர்கள், ஞானிகள் நிலை வேறு.
நதியானது கடலில் போய் சேர்வது போன்றது யோகிகள் தன் ஜீவாத்மாவை பரமாத்மாவோடு ஐக்கிப்படுத்திக் கொள்வது. ஒரு கல்லைக் கட்டிக் கொண்டு நீரில் குதித்தாலோ, தூக்கு போட்டுக் கொண்டாலோ அல்லது வேறு ஏதாவது உபாயத்தில் தன் உயிரை துன்புறுத்தி உடலில் இருந்து வெளியேற்றுவது தற்கொலைதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஒரு யோகியோ, சித்தரோ அவ்வாறு ஸமாதி ஆவதில்லை. ஜீவன் நீங்கிய பிறகும் அவர்கள் உடல் எப்படி அமர்ந்திருந்தார்களோ அப்படியே அமர்ந்திருந்தபடி இருக்கும். மேலும் உடலானது அழுகிப் போகாமல் அப்படியே வற்றி, சுருங்கிப் போய் இருக்கும். இது பல சந்தர்பங்களில் நிரூபணம் ஆகியுள்ளது. ஆனால் உங்களாலோ, என்னாலோ எந்த வேதனையும் இல்லாமல், அசைவும் இல்லாமல் உயிரை உடலில் இருந்து பிரித்தெடுக்க முடியாது. மூச்சை அடக்கி சிறிது நேரம் கூட அமர முடியாது. நம் உடல் நம்மையும் மீறி மூச்சு விட்டுவிடும். அப்படியே கஷ்டப்பட்டு அடக்கினாலும் அசையாமல் இருக்க முடியாது. இது மட்டுமல்ல உடலை பஞ்ச பூதங்களோடு கரைந்து போகச் செய்யவும் அவர்களால் முடியும்.
சாதாரணமாக மனிதர்கள் அவஸ்தைப்பட்டு, மலஜலம் கழிந்து வாய் வழியாகவோ, மூக்கு வழியாகவோ பிராணன் போய் மரணிப்பார்கள். ஆனால் ஜீவ ஸமாதி ஆகும் யோகியின் உடல் வாழ்க்கை முற்றுப் பெறுவது வேறு விதத்தில். நதியானது கடலில் கலப்பது போல யோகியின் ஜீவபோதமானது பரபோதமாக மாறி அமைகிறது. உடல் வாழ்க்கையோடு சம்மந்தப்பட்ட அவரின் உணர்ச்சியானது எல்லை கடந்த பேருணர்ச்சியாக விரிவடைகிறது. பொறிகளாகிய கண், மூக்கு, செவி, போன்றவற்றில் புலனாகும் உணர்ச்சிகள் ஏதும் யோகிக்கு இருக்காது. தூங்கப் போவது போல ஒவ்வொன்றாக அவைகள் தாமே ஒடுங்கிவிடுகின்றன.அந்தி வேளை வரும் போது, தன் வீட்டுக்கு பறந்து வரும் பறவை போல யோகியின் மனமானது இறுதி கட்டத்தில் ஹிருதயத்தில் அடங்கிவிடுகிறது. உடலெங்கும் சீதம் பரவுகிறது. அதாவது பிராணன் ஒவ்வொரு அவயத்தை விட்டும் மெதுவாக விலகுகிறது. பிராயாணி ஒருவன் வண்டி நிலையத்துக்கு வந்து சேருவது போல யோகியின் பிராணன் உச்சந்தலைக்கு வந்து சேருகிறது. அதனால் உச்சந்தலையில் மட்டும் நெடுநேரம் கதகதப்பு நீங்காதிருக்கும்.
அப்போது ஓம் என்ற பிரணவ ஓசை மட்டும் உள்ளே ஒலித்துக் கொண்டே இருக்கும். ஆதிநாதத்தை கேட்டபடி அதிலேயே ஒடுங்கி ஓம் என்ற ஓசையின் வடிவினனாகிய பரமாத்மாவின் திவ்ய சொரூபம், அலகிலா ஜோதி, பேரின்பம், சித் அம்பரம் என்ற நிலையை யோகி அடைவார் மேலைத்துவாரம் வழியாக ஜீவனை பரமனோடு இணைத்துக் கொள்வரர். இதுவே பிறப்பறுக்கும் மரணமிலாத பெரு வாழ்வு நிலை. இது மரணமல்ல இது ஜீவ ஐக்கியம். சரீரம் விழுந்து போகாமல் சரீரத்தின் துணை கொண்டே வீடு பேறு அடையும் நிலை. அதல்லாமல் மரணமிலாப் பெரு வாழ்வு என்பது ஆயுளை நீட்டித்துக் கொள்வதல்ல. இந்த மரணமிலாப் பெருவாழ்வு நிலையை அடையவே சித்தர்கள் தேகத்தை வலிமையாக்கி, ஆயுளை நீட்டித்துக் கொண்டார்கள். எனவே நண்பரே ஜீவ ஸமாதி என்பது தற்கொலையோ, கொலையோ அல்ல. அது ஜீவ ஐக்கியம். இவ்வாறு ஐக்கியமானவர்கள் நினைத்த போது வரவும் முடியும் என்று சொல்லப்படுவதுணடு. அப்படி வந்து அருள்பாலித்த்துக் கொண்டும் இருக்கிறார்கள். இதைப் பற்றி இன்னும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், சித்தர்கள் உறையும் ஜீவஸமாதியில் போய் உண்மையான மனதோடு வேண்டுங்கள், ஏதாவது ஒரு ரூபத்தில் அவர்கள் இதை உங்களுக்கு செம்மமைக விளக்கி அருளுவார்கள்.
உயிர் போகினும் போகாதுடலினை வீங்கித்
தலைகிறுத்த கல்வது தனஞ்செயன்.
பிராணனைக் கட்டுப்படுத்த வல்லவர்களுக்கு இந்த தனஞ்செயன் வாயுவை மற்ற ஒன்பது பிராணன்களில் இருந்து பிரியாமல் இருக்க வைத்து நீண்டநாள் தன் ஆயுளை நீட்டித்துக் கொள்ள முடியும். பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்வது சாத்திமா ? என்று கேட்டால் திருமூலர் சாத்தியமே என்கிறார்.
ஒத்த இவ்வொன்பது வாயுவும் ஒத்தன
ஒத்த இவ்வொன்பதின் மிக்க தனஞ்செயன்
ஒத்து இவ்வொன்பதில் ஒக்க இருந்திட
ஒத்த உடலும் உயிரும் இருந்தவே.
பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த யோகியர் பிராணாயாமப் பயிற்சியின் வல்லமையால் இந்த தனஞ்செயன் என்கிற பத்தாவது பிராணனை மற்ற பிராணன்களில் இருந்து பிரியாமல் செய்து உடலையும், உயிரையும் காத்துக் கொண்டனர். திருமூலர் 4500 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்ததாகச் சொல்வார்கள். அகத்தியரோ பல யுகங்களாக வாழ்வதாகச் சொல்வது உண்டு. அகத்தியர் ஒருவரல்ல பல பேர்கள் இருந்திருக்கிறார்கள் என்றும் வாதிடுவோர் உண்டு.
ஆனால் இந்த திருமந்திரப் பாடலைப் படித்தால் அது சாத்தியமே என்று தோன்றுகிறது.
இந்த தனஞ்செயன் வாயுவானது உயிர் போனாலும் உடலை விட்டுப் போகாமல் மூன்று நாட்கள் வரை தங்கி இருந்து பின் உடலை வீங்கச் செய்து கபாலம் வழியாக வெளியேறும் என்பது சித்தர்கள் கூற்று. இவ்வாயுவானது உடலைவிட்டு வெளியேறி விட்டால் உடலானது உடனே வீங்கி வெடித்து விடும்.
இருக்கும் தனஞ்செயன் ஒன்பது காலில்
இருக்கும் இருநூற்று இருபத்து மூன்றாய்
இருக்கும் உடலில் இருந்தில ஆகில்
இருக்கும் உடலது வீங்கி வெடித்ததே.
இந்த தனஞ்செயன் என்கிற வாயுமட்டும் மரணத்திற்குப் பிறகு மூன்று நாட்கள் இருப்பது ஏன் ? அதாவது இந்த தனஞ்செயனானது இடகலை, பிங்கலை, சிகுவை, அத்தி, அலம்புடை, புருடன், காந்தாரி, சங்கிணி, குரு ஆகிய ஒன்பது நாடிகளிலும் பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகன், தேவதத்தன் என்கிற ஒன்பது பிராணன்களுடன் கூடிஇருக்கும். அப்படி கூடி இருக்கும் வரைதான் உயிர் இருக்கும். இது பிரிந்து செயல்படும் இடத்தை நாற்சந்தி என்பார்கள். வயிரவன், முக்கியன், அந்தர்யாமி, பிரவஞ்சனன் என்ற இந்த நாற்சந்திகளில் அந்தர்யாமி பிராணவாயுவை உடலினுள்ளேயும், இரத்தத்தினுள்ளேயும் உருவாக்கிக் கொண்டே இருப்பதால்தான் இந்த தனஞ்செயன் வாயுவானது உடலில் தங்கிவிடுகிறது. இதைப் பயன்படுத்தி சித்தர்கள் இறந்ததாகக் கருதப்படும் உடலில் பிராணவாயுவை அதிகரிக்கச் செய்து உயிர் பெற்று ஏழ வைத்துவிடுவார்கள். இதனால்தான் இறந்தவர்களை புதைக்கச் சொல்கிறார்கள்.
சாதாரணமான மனிதர்களுக்கு புதைத்த உடலில் இருந்து எவ்வித துன்பமும் இல்லாமல் தனஞ்செயன் வெளியறிவிடும். ஆனால் எரியூட்டப்படும் உடலில் இருந்து தனஞ்செயன் வேதனையுடனும் வலியுடனும் டப் என்ற சத்தத்துடன் மண்டையை உடைத்துக் கொண்டு வெளியேறும். மேலும் ஞானிகளின் சமாதி நிலையை மரணம் என்று எண்ணி அவர்கள் தேகத்தை எரித்துவிடக் கூடும், என்று கருதியே வள்ளலார் எரியூட்டுவதைக் கடுமையாக எதிர்த்தார். எரிப்பது என்பது கொலைக்குச் சமம் என்கிறார். வேலூருக்கருகே வள்ளிமலை கோவிலில் திருப்பணி வேலைகள் நடந்து கொண்டிருந்த போது, உடைந்திருந்த படிக்கல்லை எடுத்து விட்டு, புதுப் படிக்கல் போடுவதற்காக உடைந்த படிக்கல்லை நகர்த்திய போது, உள்ளே சித்தர் ஒருவரின் அமர்ந்த திருக்கோலத்தைத் தான் கண்டதாக திரு முருக கிருபானந்த வாரியார் சொல்லியிருக்கிறார். யோகியர் தேகத்தை மண்கூடத் தீண்டாது. கேசரி, லம்பிகா யோகத்தில் அப்படி அமர்ந்திருப்பவர்களை விபரம் தெரிந்தவர்கள் எழுப்பி விடமுடியும். அந்த இடத்தில் இது குறித்த விபரம் தெரிந்தவர்கள் யாரும் இல்லையெனில் மீண்டும் புதைத்து விடுவார்கள். அப்படி லம்பிகா யோகத்தில் அமர்ந்திருப்பவர்கள் இறந்தவர்கள் போலத்தான் காணப்படுவார்கள். அவர்கள் உடல் எத்தனை யுகங்களானாலும் பூச்சிகள் மற்றும் இயற்கை சீற்றங்களால் அன்றி வேறெதாலும் அழியாமல் அப்படியே இருக்கும். அவர்கள் வாயை பக்குவமாகத் திறந்து உள்ளே உள்நாக்குப் பகுதியை அடைத்திருக்கும் நாக்கை மெதுவாக எடுத்துவிட்டு, மெதுவாக கைகால்களை நீட்டி படுக்க வைத்து, மிகவும் மெதுவாக கை கால்களைத் தேய்த்து இரத்த ஓட்டம் வரச் செய்தோமானால், அவர்களுக்கு மூச்சு வந்துவிடும். ஆனால் கண்களைத் திறந்து நம் மீது கோபித்துக் கொள்ளவும் கூடும்.

http://suganesh80.blogspot.in/

Monday, October 27, 2014

சளி – இதிலிருந்து விடுபட முடியாதா?

மண்டைச் சளி – மார்புச் சளி நீங்க….
நமது உடலின் அதிக சூட்டை சமாளிக்கவும் தேவையற்ற – நச்சுப் பொருட்களைத் தடுக்கவும் உடல் தனது தேவைக்காக உருவாக்கிக் கொள்வதே சளி எனும் நீர் மூலகத் திரட்சி.
இது இயல்பாக முறையாக வெளியேறும் போது நன்மையானதே. நமது அறியாமையால் பழக்கவழக்கங்களும், வாழ்க்கை முறையும் உடல் இயற்கைக்கு எதிராகும் போது; இந்த சளி அளவு அதிகமாவதாலும், இயல்பாக வெளியேற்றும் வழிகள் தடுக்கப்படுவதால் சளி கட்டிபட்டு – உடல் அதை வெளியேற்ற கடும் முயற்சிகள் எடுக்க வேண்டியதாகிறது.
கட்டிபட்டுப்போன சளியை – வெளியேற்றும் முயற்சியின் விளைவே, இருமல், தும்மல், ஈளை, இளைப்பு என பலவாறான துன்பத்துக்கு ஆளாக வேண்டியுள்ளது.
நீங்கள் பார்க்கலாம் வீட்டுச் சுவற்றில் ஒட்டிய சளித் திவலையை அடுத்த நாள் பார்த்தால், அந்த இடத்தில் பளபளப்பாகத் தெரியும். கையை வைத்து தடவிப் பார்த்தாலும் ஒன்றும் தெரியாது ஆனால் சிறிது நீர் பட்டால் அது உப்பிப் பெரிதாகி இருப்பதைக் காணலாம். இது போன்ற நிலைதான் சளியால் பாதிக்கப்பட்ட உடல் கருவிகளுக்கும். உடல் சூடு அதிகரிக்கும் போது உடலுடன் ஒட்டி பின் உடல் தன்னிலை அடைந்து வெளியேற்றும் ஆற்றல் சீராக்கப் பெறும் போது சளி சுகமாக வெளியேறுகிறது. ஆனால் நாள்பட்ட கட்டிபட்ட சளியை வெளியேற்ற உடல் மிகவும் துன்பமடைகின்றது.
எதிர்முறைய மருந்து வணிகர்கள் இதை தனது வியாபாரத்திற்கு அடித்தளமாக பயன்படுத்துகின்றனர். அவர்களை நம்பும் மனிதர்களை நிரந்தர நோயாளிகளாக்கத் தேவையான எல்லா பத்திய முறைகளையும் அவர்கள் மீது திணிக்கின்றனர். எதிர்முறையர்களின் மருந்துகளும், வாழ்க்கை முறைகளும் உடலின் வெளியேற்றும் ஆற்றலை தடுத்து அழித்து விடுகிறது மேலும் உடலைச் சூடாக்கி சளி உற்பத்தியை அதிகப்படுத்துகிறது. இதனால்,
வெளியேற்றும் போது ஏற்பட்ட துன்பம் தெரியாத நிலையில் – சிறிது காலம் தொல்லை இல்லாது இருக்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள் ஆனால், இதற்காக பயன்படுத்தப் பட்ட மருந்துகளினால் ஏற்பட்ட விளைவுகளாகிய புதிய நோய்களாலும்-மருந்துகள் உருவாக்கிய சூட்டால் அதிகரிக்கும் சளியாலும் நோயின் தன்மை மேலும் மோசமடைகிறது.
குழந்தைகளை சளித் தொல்லைக்காக எதிர்முறைய மருத்துவரிடம் அழைத்துச் செல்லும் போது அவர் என்ன கூறுகிறார்.
குளிர்ச்சியான உணவுகளைத் தவிருங்கள், தலைக்கு தண்ணீர் ஊற்ற வேண்டாம், சூடான தண்ணீர் மட்டும் கொடுங்கள், வாரம் அல்லது பத்து நாட்களுக்கோர் முறை சுடுநீரில் குளித்தால் போதும், பழங்களைத் தவிர்த்து விடுங்கள், காதுகளை நன்கு மூடிவையுங்கள் (சென்னையில் இந்த வெயிலிலும் காது மூடிகள் பயன்படுத்தும் ஆட்களை பார்க்க முடிகிறது) என பல பத்தியங்களோடு போதையூட்டும் டானிக்குகளையும், சளி வெளியேற்றாது தடுக்கும் மருந்து, மாத்திரைகளையும் கொடுத்து விடுகிறார்கள். உடலுடைய ஆற்றலை தடுக்க முடியாததால் பிரைமரி காம்ப்ளக்ஸ் என பெயரிட்டு பல ஆண்டுகள் வைத்தியம் பார்க்கிறார்கள். பின் உடலின் ஆற்றல் மிக பலவீனமாகி அதன் காரணமாக வெளியேற்றும் முயற்சி நின்ற பின் அந்த டாக்டர் தான் கஷ்டப்பட்டு குணப்படுத்தினார் எனப் பேச ஆரம்பிக்கிறார்கள்.
ஆனால், விரைவில் இளைப்பு, ஈளை (வீசிங் டிரபுள், ஆஸ்துமா, டி.பி) என்ற புதிய பெயரில் சில ஆண்டுகளுக்குள் அதே அல்லது புதிய டாக்டரையோ தேடிப்போய் வாழ்நாள் முழுவதும் வைத்தியம் பார்க்கிறார்கள். நினைத்துப் பாருங்கள் நமது கண்களுக்கு தெரிந்த இந்த காட்சிகள் மிக மலிந்துள்ளன நம் நாட்டில். டி.பி இது – இந்தியன் காமன் டிசிஸ் என முத்திரையும் கொடுத்திருக்கிறார்கள்.
சளி – இதிலிருந்து விடுபட முடியாதா?
முடியும். மிக எளிதாக, சுகமாக விடுபட முடியும்.
எப்படி?
நமது உடல் இயற்கையை புரிந்துகொண்டு நமது முன்னோர் வகுத்த பாதையில் மிக எளிதாக, சுகமாக அனைத்து நோய்களிலிருந்தும் விடுபட்டு நலமாய் வாழலாம். உங்கள் ஞாபகத்துக்காக,
1.
இரவு சூரியன் மறைவதற்கு முன் உணவை முடித்துக் கொள்ளுதல். (தற்காலத்தில் உடன் அந்த பழக்கங்கள் முடியாவிடில் இரவு 8.30குள் உணவை முடிப்பது சிறப்பு)
2. இரவு கண்களுக்கு அதிகம் வேலை கொடுக்காதிருத்தல். (இரவு 8 மணிக்கு மேல் தொலைக்காட்சி, படிப்பு, கம்யூட்டர் பயபடுத்தல் கூடாது. தேவைஎனில் அதிகாலை 3 மணிக்கு மேல் படித்தல் நன்று.)
3.
இரவு உணவை மிதமாக கொள்ளுதல் நன்று. ( சில நேரம் தவிர்க்கமுடியாத காரணத்தால் தாமதமாக சாப்பிட்டால் பழ உணவுகள் மட்டும் சாப்பிடலாம்.)
4.
இரவு விரைவாக படுக்கைக்கு செல்லுதல் – தூங்குதல். (மனம் சமாதானம் அடைந்தால்தான் தூக்கம் வரும். எனவே இறைவனிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டால்- மன அமைதியுடன் நன்கு தூங்கலாம்)
5.
அதிகாலை விரைவாக துயில் எழுதல் நல்லது.(அதிகாலை 3 மணிக்கு எழுதல் மிகச் சிறப்பான நன்மை தரும். காலையில் படித்தல் ஞாபகசத்தியை அதிகரிக்கும்)
6.
காலைக் கடன்களை 6 மணிக்குள் முடித்துக்கொள்க. (இரவு பணியில் ஈடுபட்டு இரவு நீண்ட நேரம் தூங்காமலிருக்க நேர்ந்தாலும் கூட இது அவசியம் தேவைப்பட்டால் காலை உணவுக்குப் பின் சிறிது தூங்கிச் சமாளிக்கலாம்.)
7.
பல் துலக்குதல், ஐயத்தூய்மை பழகுக. (வெறும் விரலால் – நன்கு ஈறுகளை மென்மையாக அழுத்தி விடுதல் நல்லது. பின், கைப் பெருவிரலால் உள்நாக்கிருக்கும் இடத்தில் மெல்ல சுழற்ற நன்கு சளி வெளியேறும். பின் மா,வேம்பு, ஆல் இவற்றின் குச்சிகள் அல்லது வெறும் பிரஸ் கொண்டு லேசாக பல் இடுக்குகளில் உள்ள அழுக்குகளை நீக்கிக் கொள்க.)
8.
நல்ல குளிர்ந்த நீரில் தலை முழுகுதல்-குளித்தல் வேண்டும்.(குளிர்நாடுகளில் உள்ளவர்கள் அறை வெப்பநிலையில் உள்ள நீரைப் பயன்படுத்துக.)
9.
இயற்கையான நறுமணப்பொருள்களை பயன்படுத்தல் வேண்டும். (சோப்பு, சாம்பு, சிகைக்காய் இவை உடலைச் சூடாக்கும். மேலும் உடலில் உள்ள வியர்வைத் துளைகளை அடைத்து உடல் சுவாசிப்பதைத் தடுக்கும்- கழிவு வெளியேற்றத்தை தடுக்கும்.எனவே இவற்றைத் தவிருங்கள்.)
10.
வாரம் இரு முறை எண்ணெய் குளியல் வேண்டும். (எண்ணெய் குளியல் சித்தர்களின் அரிய அறிவியல் உடல் தன்மைக்கேறப பல தைலங்களை பயன்படுத்தலாம் அல்லது நல்லெண்ணெய் சிறப்பு. பயன்படுத்திப் பாருங்கள் – சுகத்தை)
11. காலை 7 முதல் 8.30 மணிக்குள் உணவு கொள்ள வேண்டும். (நமது உடற் கடிகாரத்தின் படி காலை 7 முதல் 9 வரை இரைப்பைக்கு சத்தி சிறப்பாக கிடைக்கும் நேரம். 9முதல் 11 வரை தண்ணீர் கூட கூடாது. அது மண்ணீரல் தன்னை முறைப்படுத்திக்கொள்ளும் நேரம்.)
12.
உணவுக்கு முன் இனிப்பான பழங்கள் சாப்பிடுதல் நல்லது. (மூன்று வேளையுமே உணவுக்கு முன் பழங்கள் சாப்பிடுவது நல்லது.)
13.
மதிய உணவு பசி வரும் பொழுது எடுத்துக் கொள்க. (இரண்டு வேளை உண்பவன் போகி என்பர் சான்றோர். பசித்துப் புசிப்பதே சிறப்பு. மக்களின் பழக்கத்தை ஒட்டி எழுதுகிறேன்.)
14.
பசியறிந்து உண்ணுவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம்
-தாகம் உணர்ந்து தேவையான அளவு குளிந்த நீர் குடித்தல் வேண்டும். (எதிர்முறையர்களின் அளவுகள் மிகத் தவறானது நமது உடலுக்கு மதிப்பளிப்போம் படைப்பாற்றல் நமக்கு அளித்திருக்கும் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம். உதாரணம் பசி, தாகம் போன்றன.)
15.
கழிவுகளை கட்டுப்படுத்தல் கூடாது. காலை, மாலை கழிவு வெளியேற்றப் பழக்க வேண்டும். (உடலது தேவைகளுக்கு உதவ்வேண்டியது அறிவின் கடமை அந்த அளவே நலவாழ்வுக்கு போதுமான அடிப்படை அறிவாகும்.)
16.
மாதம் ஓர் முறை மென்மையான பேதி மருந்துகள் எடுத்தல் நல்லது. ( இப்போதுள்ள உணவு மற்றும் சூழல் எதிர்முறையர்களின் வணிக அறிவால் மாசுபட்டுள்ளது. அதனால் மாதம் ஓர்முறை மென்மையான பேதிமருந்துகளால் உடல்தூய்மை செய்வது சிறப்பு. குடலைக்கழுவி உடலைத் தேற்றென்பர் பெரியோர்.)
17.
மாலையும் ஓர்முறை நன்கு தலைக்கு குளித்தல் மிகவும் நல்லது. (இப்போதய சூழல் மாசிலிருந்து தப்ப – மாலை அல்லது இரவும் மீண்டும் ஓர்முறை குளிப்பது நல்லது.)
முன் கூறியபடி பழக்கவழக்கங்களைச் சீர்செய்து கொள்ள, உடலின் கழிவு வெளியேற்றம் சீராகி உடல் நலம் பெருகும்.
உடல்நலம் என்பது மிக எளிதான ஒன்று தான் நாம் நமது உடலியற்கையை அறிந்து உடலுக்கு உதவினால் எல்லாம் சுகமே. மேலும் நம்மைப்படைத்த படைப்பாற்றல் – இறைவன் எப்பொழுதும் நம்மை காக்க துணை வரும்.
நம்முள் இருக்கும் படைப்பாற்றலின் தன்மை அறிந்து – தன்னை உயர்த்திக் கொள்வது மனிதப் பிறப்பின் தேவை.
நன்றி ;-http://siddhahealer.wordpress.com/