Monday, October 6, 2014

சீரடி சாய்பாபா அற்புத வரலாறு

சந்தியா கிரிதர்
மகாராஷ்டிரா மாநிலத்தில் கோதாவரி நதிக்கரையில் இருக்கும் சீரடி எனும் அந்த கிராமத்தில் ஒரு பழமையான மசூதி ஒன்று இருந்தது. அந்த மசூதியின் பின்புறம் ஒரு வேம்பு மரம் ஒன்றும் இருந்தது.
அந்த வேப்பமரத்தின் அடியில் ஒரு எட்டு வயதுச் சிறுவன் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தான்.
அந்த சிறுவனின் முகத்தில் தெய்வீக ஒளி வட்டம் ஒன்றிருப்பதைக் கண்ட அந்த கிராமத்துத் தலைவரின் மனைவி பாஜ்யாபாய் அந்த சிறுவனைக் கண்டு தன் வீட்டுக்கு வரும்படி அழைத்தாள்.
ஆனால் அந்த சிறுவன் அவருடன் வீட்டுக்குச் செல்ல மறுத்து அந்த இடத்திலேயே தியானம் செய்வதிலேயே ஆர்வம் கொண்டான்.
அந்தச் சிறுவன் தன்னுடன் வர மறுத்தாலும் அந்தச் சிறுவனிடம் ஏற்பட்ட பாசத்தால் அவனுக்குத் தினமும் உணவு கொண்டு வந்து கொடுப்பதாகவும் அதை மறுக்காமல் வாங்கிச் சாப்பிட வெண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
அதற்கு அந்தச் சிறுவனும் சம்மதித்தான்.
அந்தத் தாயும் சிறுவனுக்குத் தினசரி உணவு கொண்டு வந்து கொடுத்தாள். அந்தச் சிறுவனும் அதை வாங்கிச் சாப்பிட்டுக் கொள்வான். அவர்களுக்கிடையே தாய்- மகன் பாசம் மேலிட்டது.
அந்த வேப்பமரத்தின் அருகிலிருந்த கந்தோபா எனும் கோவிலின் பூசாரி அந்தச் சிறுவனிடம் இருந்த தெய்வீக ஒளியைக் கண்டு அந்தச் சிறுவனை "சாய்" என்று அழைக்கத் துவங்கினார்.
சில காலத்திற்குப் பிறகு அந்தச் சிறுவன் அந்த ஊரை விட்டு வெளியேறினான். ஊர் ஊராக அலைந்து திரிந்த அந்தச் சிறுவன் அங்கிருந்த கோவில்களில் எல்லாம் வணங்கி வழிபாடு செய்தான்.
இப்படி அலைந்து கொண்டிருந்த சிறுவன் சாந்து பாட்டீல் எனும் வியாபாரியைச் சந்தித்தான். அந்தச் சிறுவனின் தெய்வீகத் தன்மையைக் கண்டு வியந்த அவர் தனது மகள் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்று வற்புறுத்தினார்.
சிறுவனும் கலந்து கொள்வதாக உறுதியளித்தான்.
அந்தச் சிறுவன் அந்த வியாபாரியின் மகள் திருமணத்திற்காக அந்த வியாபாரியின் குடும்பத்தினருடன் சீரடிக்கு மீண்டும் வந்தான்.
அப்போது அந்த சிறுவனுக்கு வயது பதினாறு ஆகியிருந்தது.
சீரடிக்குத் திரும்பிய அந்தச் சிறுவன் தான் முன்பு அமர்ந்திருந்த அந்த வேப்பமரத்தடியைத் தேடிச் சென்று அமர்ந்தான்.
கந்தோபா கோயில் பூசாரிக்கு வேப்பமரத்தடியில் முன்பு தியானம் செய்து கொண்டிருந்த அந்தச் சிறுவன் மீண்டும் திரும்பி வந்திருப்பதை அறிந்து கொண்டார்.
அந்தச் சிறுவன் அந்த வேப்பமரத்தடியை விட்டு வேறு இடத்தில் அமர மறுப்பதைக் கண்ட அந்த ஊர் மக்கள் அது பற்றி அவனிடமே கேட்டார்கள்.
அதற்கு அந்தச் சிறுவன் இந்த வேப்பமரம்தான் தனது குரு என்று பதில் அளித்தான்.
பின் அந்த மரத்தினடியில் ஒரு இடத்தைக் காட்டி அந்த இடத்தைத் தோண்டச் சொன்னான்.
அங்கு சிறிது ஆழம் தோண்டியதும் உள்ளே ஒரு சிறு அறையில் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
இதைப் பார்த்ததும் அந்த ஊர் மக்கள் வியந்து போனார்கள். அந்தச் சிறுவனைக் கடவுளின் அவதாரமாகக் கருதினார்கள். கடவுளைப் போன்று பூஜிக்கத் துவங்கினார்கள்.
அன்றிலிருந்து அந்தச் சிறுவன் அற்புதங்கள் நிகழ்த்தத் துவங்கினான்.
அந்தச் சிறுவன் கோவில் பூசாரி அழைத்த சாய் என்பதுடன் மக்கள் பாபா என்பதையும் சேர்த்து "சாய்பாபா" என்று அழைக்கத் துவங்கினார்கள்.
இதுதான் சீரடி சாய்பாபா குறித்த வரலாறு.
இந்த சீரடி சாய்பாபா அந்த ஊரில் பல அற்புதமான செயல்களைச் செய்து மக்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியதுடன் அவரை அனைவரையும் நேசிக்கவும் வைத்தார்.
இவரின் அற்புதங்கள் அந்த ஊரை விட்டு அடுத்த ஊர்களிலும் பரவியது. அவரைத் தேடி பல இடங்களிலிருந்தும் மக்கள் வரத் துவங்கினார்கள். அவரும் அனைவரது கவலைகளுக்கும் வடிகாலாக பல அற்புதங்களைச் செய்து காண்பித்து மகிழ்ச்சியடையச் செய்தார்.
அவர் வேப்பமரத்தடியில் அமர்ந்து கிருஷ்ண பரமாத்மாவை வழிபட்டு வந்தார் என்றாலும் இசுலாமிய வழிபாட்டுத் தலமான மசூதியில் தங்கிக் கொண்டு அவர்களுடைய நம்பிக்கைக்கும் உரியவரானார். இதனால் இரு மதத்தினருக்கும் அவர்கள் மத அடிப்படையிலான நன்மைகளை எடுத்துச் சொல்லி மத வேற்றுமைகளைத் தவிர்த்தார். இதனால் இவரிடம் இரு மதத்திலிருப்போரும் ஈடுபாடு கொண்டனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்த சாய்பாபா தேவையுள்ள சமயத்தில் மக்களுக்கு உதவியது மட்டுமில்லாமல், மக்களுக்கு நல்ல அறிவுரைகளையும் கொடுத்துள்ளார்.
ஓவ்வொரு மனிதனும் கடவுளை அடைவதற்கு முயற்சி செய்கிறான். அப்போது மனிதன் பல கட்டங்களை தாண்டிச் செல்கிறான்.
மனிதன் உலகத்து பொருளின் மீது வைத்திருந்த ஆசையை அடக்கும் போது, அவன் முக்தி பெறுகிறான்.
மனிதன் பந்தபாசத்தை தவிர்க்கும் போது, அவன் விரக்தி அடைகிறான்.
மனிதன் ஆத்மாவை அறிந்து கொள்ளும் போது, அவன் தன்னைப் புரிந்து கொள்கிறான்.
மனிதன் உணர்வுகளைத் துறக்கும் போது, அவன் விசர்ஜனம் பெறுகிறான்.
மனிதன் உண்மையை நேசிக்கும் போது, அவன் தர்மத்தை கடைப்பிடிக்கிறான்.
மனிதன் மற்றவர்களுக்காக வாழும் போது, அவன் முதிர்ந்த மனப்பக்குவத்தை அடைகிறான்.
மனிதன் உடலையும் உள்ளத்தையும் அடக்கும் போது, அவன் தியானத்திலிருக்கிறான்.
மனிதன் தூய எண்ணத்தோடு செயல்படும் போது, அவன் அமைதியை நாடுகிறான்.
மனிதன் அமைதியான நிலையில் கடவுளை அடைவதற்கு ஒரு நல்ல குருவை தேடுகிறான்.
மனிதனுக்கு நல்ல குரு கிடைத்தவுடன், அவன் விவேகத்தை பெற்று கடவுளோடு இணைகிறான்.
மனிதன் என்பவன் உலகத்திலுள்ள அனைத்து இன்பங்களையும் அனுபவித்த பிறகு கடவுளை நாடுகிறான்.
மனிதன் கடவுளை தேடும் போது அவனுக்குள்ளே ஒளிந்து கொண்டிருக்கும் உண்மையான மனிதனை அறிந்து கொள்கிறான்.
இந்த உண்மையே மனிதனை கடவுளோடு இணைக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளே கடவுள் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு காலகட்டத்தில் இறைவனை புரிந்து கொள்கிறான்.
இப்படி பல அற்புதங்கள் பல நிகழ்த்திய சாய்பாபாவிற்கு வக்கீல் தொழில் புரியும் பட் என்பவர் அறிமுகமானார். அவர் சாய்பாபா மீது அளவில்லாத நம்பிக்கை வைத்திருந்தார். சாய்பாபா அவரிடம் தான் சமாதி அடைவதற்காக தனிவீடு ஒன்று கட்டித் தரும்படி சொல்ல அவரும் அப்படியே வீடு ஒன்று கட்டித் தந்தார். சாய்பாபா அந்த வீட்டில் அப்துல் என்ற ஏழையை தனக்கு சேவை செய்வதற்காக தன்னுடன் வைத்துக் கொண்டார். 1918 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதியன்று சாய்பாபா சமாதி அடைந்தார்.
இன்றும் மக்கள் நம்பிக்கையோடு இங்கு வந்து சீரடிசாய்பாபாவை தரிசனம் செய்து செல்கிறார்கள். ஆந்திர மாநிலத்திலிருக்கும் திருமலை திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கைக்கு அடுத்தபடியாக இந்த சீரடி சாய்பாபாவின் தலத்திற்கு வருபவர்கள் இருக்கிறார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்க ஒன்று.

No comments:

Post a Comment