Tuesday, August 19, 2014

இடும்பன் திருதல வரலாறு

முருகனால் அழிக்கப்பட்ட சூரபத்மன், பானுகோபன், கஜமுகாசுரன், சிங்கமுகன் ஆகிய அசுரர்களுக்கு வில்லாசிரி யனாகத் திகழ்ந்தவன் இடும்பாசுரன். முருகனால் இவர்கள் அழிக்கப்பட்ட பிறகு, இடும்பன் சிவபூஜை செய்ய ஆரம்பித்தான். சிறந்த சிவபக்தனாக விளங்கிய இடும்பனுக்கு அவனது மனைவி இடும்பி உற்றதுணையாக விளங்கினாள். இவர்கள் தங்கியிருந்த இடம் "இடும்ப வனம்' எனப்பட்டது. (தற்போது இந்தஇடம் திருத்துறைப் பூண்டியில் இருந்து 16 கி.மீ., தூரத்தில் உள்ளது) இந்நிலையில், அகத்தியர் தனது பூஜைக்காக சிவதி சொரூபங்களாக விளங்கும் சிவமலை மற்றும் திமலை ஆகியவற்றை முருகப் பெருமானிடம் கேட்டார். முருகப்பெருமானும் அவற்றைத் தந்தருளினார். அவற்றை கேதாரத்தில் உள்ள பூர்ச்சவனம் என்னுமிடத்தில் வைத்து வணங்கி வந்தார் அகத்தியர். இந்நிலையில் மலைகளை அங்கேயே வைத்து விட்டு பொதிகை செல்லும் நிலை ஏற்பட்டது. இடும்பன் வன சஞ்சாரம் செய்த போது, குற்றால மலையில் தங்கியிருந்த அகத்தியரைக் கண்டான். முருகப்பெருமானின் கருணையைப் பெற விரும்புவதாகக் கூறினான். அசுரகுருவாயினும் அவனது உயர்ந்த எண்ணத்தைப் புரிந்து கொண்ட அகத்தியர், கேதாரத்திலு ள்ள சிவமலை, திமலையை "சரவணபவ' என்னும் ஆறெழுத்து மந்திரத்தையும், பாவம் போக்கும் "அரோகரா' என்றும் முழங்கியபடியே பொதிகைக்கு கொண்டு வந்தால் முருகனின் தரிசனம் கிடைக்குமென்றார்.
இடும்பனும் இடும்பியும் அங்கு சென்று அம்மலையைத் தூக்க சிவனை வேண்டி தவமிருந்தனர். அப்போது பிரமதண்டம் (கம்பு) ஒன்று தோன்றியது. அஷ்டதிக்கு நாகங்களும் அங்கே வந்தன. அவற்றை பிரமதண்டத்தில் உறிபோல் கட்டி, மலைகளை அதில் வைத்து காவடியாகச் சுமந்தபடி பொதிகை வரும் வழியில் திருவாவினன்குடி என்ற இடத்தில் பாரம் அதிகமாகவே அங்கே இறக்கி வைத்தான். இளைப்பாறிய பிறகு மீண்டும் தூக்கவே அவனால் முடியவில்லை. சிவமலையின் மீது ஒரு சிறுவன் ஏறி நின்றுவிளையாடிக் கொண்டிருந்தான். அவனது அழகைப் பார்த்ததுமே இடும்பன் அவனை ஒரு தெய்வப்பிறவி என்று நினைத்தான். மலையில் இருந்து இறங்கிவிடும்படி அவனைச் சொன்னான். அவன் மறுத்ததுடன், ""இது நான் தங்கப்போகும் மலை'' என்று வாதிட்டான். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவருக்கும் யுத்தம் துவங்கியது.
தம்பியை காத்த அண்ணன்: சிறுவன் வடிவிலிருந்த முருகனிடம், இடும்பன் சண்டையிட முயன்றபோது, விநாயகர் அவரை காக்க வந்தார். ஆனாலும், முருகனுக்கு கிடைக்க வேண்டிய பழத்தை தான் பெற்றுக்கொண்டதால், தன் மீது அவருக்கு கோபம் இருக்கும் என்பதால், சுயவடிவத்தை மறைத்து நாக வடிவில், இடும்பனுடன் சண்டையிட்டார். இந்த விநாயகர் மலைக்கோயில் செல்லும் வழியில், இடும்பன் சன்னதி அருகில் சர்ப்பத்தின் மீது காட்சி தருகிறார். தன் வலது காலை நாகத்தின் தலை மீது வைத்துள்ளார். "சர்ப்பவிநாயகர்' என்று இவரை அழைக்கிறார்கள். மலைக்கோயில் அடிவாரத்தில் "பாதவிநாயகர்' இருக்கிறார். மலையேறும் முன்பாக இவரை வணங்கிச்செல்ல வேண்டும் என்பது ஐதீகம். இவ்விநாயகருக்கு பின்புறத்தில் முருகனின் பாதம் இருக்கிறது. இவ்விரு விநாயகர்களின் தரிசனமும் இங்கு விசேஷம்.
அந்தச்சிறுவன் தன் கையில் இருந்த தண்டத்தால் இடும்பனை லேசாகத் தட்ட, அந்த அடியைத் தாங்க முடியாமல் இடும்பன் கீழே விழுந்து இறந்தான். இடும்பி கதறினாள்.அசுரர்களுக்கே வில்வித்தை கற்றுக்கொடுத்த தன் கணவனைக் கொல்லும் தகுதி, அசுரர்களை வென்ற அந்த முருகனைத் தவிர வேறு யாருக்கும் இருக்க முடியாது என உறுதியாக நம்பிய இடும்பி, சிறுவனின் காலில் விழுந்தாள். அச்சிறுவன் மயில் மேல் முருகனாக காட்சி தந்து இடும்பனை எழுப்பி,""இடும்பா! இம்மலையின் இடையில் நீ நிற்க வேண்டும். பக்தர்கள் உன்போல் எனக்குரிய வழிபாட்டு பொருட்களை காவடியாக கொண்டு வர வேண்டும். உன்னை முதலில் வழிபட்டே என்னை வழிபட வேண்டும். உன்னை வணங்கியவர்கள் என்னை வணங்கிய பயனைப் பெறுவார்கள்,'' என்றார்.
பழநி செல்பவர்கள் இடும்பனையும் அவசியம் வழிபட வேண்டும். அப்படியானால் தான் முருகனை வழிபட்ட முழுபலனும் கிடைக்கும். குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாக, சகல தோஷங்களும் நிவர்த்தியாக இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள்.
பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமிக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
2000ம் ஆண்டில் பழநிமலை எதிரிலுள்ள மலையில் இடும்பனுக்கு தனிக்கோயில் அமைக்கப்பட்டது. 13 அடி உயரத்தில் இடும்பன் காவடி தூக்கி வருவது போன்ற பிரமாண்ட சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. விநாயகர், முருகன் சிலைகளும் உள்ளன. 540 படிகள் ஏறி இடும்பனைத் தரிசிக்க வேண்டும். பழநி செல்பவர்கள் இடும்பனையும் அவசியம் வழிபட வேண்டும். அப்படியானால் தான் முருகனை வழிபட்ட முழுபலனும் கிடைக்கும்.
நன்றி :- http://ssntamil.blogspot.in/

No comments:

Post a Comment